சனி, 16 ஜூலை, 2011

நூலாய்வு

நூல்: விடியலின் விழுதுகள்
நூலாய்வு:கலைமகள் ஹிதாயா றிஸ்வி
நூல் ஆசிரியை:ஸக்கிய்யா சித்தீக் பரீத்


மாவனல்லை தெல்கஹகொடையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு தெஹிவளையை வாழ்விடமாகவும் கொண்ட இந்த நூல் ஆசிரியை ஸக்கிய்யா பரீத்.கொழும்பு  ஸாஹிராக்  கல்லூரியின் ஆசியைகளில் ஒருவர். இவர் தமிழறிவும் ,ஆற்றலும்   ,கற்பிக்கும் திறனும் ,ஆளுமையும் கொண்டவர்.அறிஞர் ஏ.எம்.ஏ அசீஸ் கலாநிதிக்குப் பிறகு ஸாஹிராவில் இறுதியாக நடை பெற்ற முத்தமிழ் விழாவின் போது ஸக்கியாவின்  வகிபாகம் மகத்தானது.அவ்விழாவில் வைத்தே தனது  முதலாவது நூலான "ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் "என்ற நூலைப் பிரசவித்தார்.திருமதி ஸக்கியாவின் ஆசிரியர் வாண்மையும் நல்லொழுக்கப் பண்பாட்டு  விழுமியங்களும் ஒரு புறமிருக்க அவரது எழுத்து வாண்மையைப் பற்றியும் சற்று அலச வேண்டியிருக்கிறது.பொதுவாகவே ஓர் ஆசிரியராயிருப்பவருக்கு சரளமாய் எழுதவும்,பேசவும் இயலும் என்பதில் ஐயத்துக்கு இடமில்லை தான்.ஆனால் அவர்கள் அனைவராலும் மிகச் சிறப்பான முறையில் கதை,கட்டுரை,கவிதைகள் வடிக்க முடியுமா? என்பது ஐயத்துக்குறியதே  .ஆனால் எமது தாய்த் திரு நாட்டைப் பொறுத்த அளவில் மிகச் சிறந்த இலக்கியவாதிகளும்,எழுத்தாளர்களு
ம் ஆசிரியர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர்,இருந்தும் வருகின்றனர்.இவர் திருப்பம்,மங்கா வடு,காலத்தின் கோலம்,கண்ணீர் எழுப்பிகள்,இறைத் தீர்ப்பு,திசை மாறிய பறவை,நிரபராதிகள்,கோக்கி யார்?,மின்னும் தாரகை,இணங்கிப் போ மகளே!,இழவு காத்த கிளி,முக்காட்டினுள் மாமி,நியதி போன்ற பதின்மூன்று தலைப்புக்களில் இவரது சிறுகதைகள் விடியலின் விடிவுகள் நூலாக தோன்றியது.சுப்ரமணிய பாரதி கூட,தனது பா,கவிதை வடிவங்களோடு உரைநடையில் காத்திரமான கட்டுரைகளை படைத்தளித்த தோடு சமூக நீதியைப் போதிக்கும் சிறுகதைகளையும் எழுதினார்."சிறுகதை மன்னன்"என்று தமிழ் கூறும் நல்லுலகெங்கும் போற்றிப் புகழப்படும் புதுமைப்பித்தன் போலவே இலங்கையிலும் பல புகழ்மிக்க சிறுகதை ஆசிரியர்கள் தோன்றினார்.புதுமைப்பித்தன் தமிழகத்தைச் சேர்ந்தவர்.அவரினால் ஈர்க்கப்பட்டு அவரின் அருட்டுணர்வில் யதார்த்த பூர்வமான சிறுகதைகள் வடித்தவர்தான் இலங்கையின் கிழக்கு மண்ணைச் சேர்ந்த "பித்தான் ஷா"என்பவர்.கே.எம்.ஷா என்ற இயற்பெயர் கொண்ட இவர் புதுமைப்பித்தன் மீது கொண்ட அபிமானத்தால் தந்து பெயரைப் "பித்தன் ஷா"என்றே மாற்றியமைத்துக் கொண்டார்.இவரது சிறுகதை சர்வதேசத்தரம் வைத்ததாகும்.இவரை நிகர்ந்த பல சிறுகதை ஆசிரியர்கள் எமது நாட்டிலும் தொன்றியுருக்கின்ற்றனர் அவர்களுள் இலங்கையர்கோன்,மூ.தளையசிங்கம்,தாழையடி சபாரித்தனம்,டொமினிக் ஜீவா,கே.டானியல்,தெளிவத்தை ஜோசப்,செ.யோகநாதன்,மருதூர்க் கொத்தன்,அ.ஸ.அப்துஸ் ஸமது,பீ .எம்.புன்னியாமீன்  போன்றோர் (பட்டியில் நீண்டது) குறிப்பிடத்தக்கவர்கள்.காலச்சுழற்சியில் பலர் மறைந்து போகச் சிலரே எஞ்சி நிற்கின்றனர் புதியவர்கள் சிலரும் முனைப்புடன் சிறுகதைகள் படைத்தளிக்கின்றனர்.புதியவர்களில் எஸ்.எல்.எம்.மன்சூர்,ராஞ்ச குமார்,திக்குவல்லை கமால் (இன்னும் பலர்)போன்றோரைக் கோடிட்டுக் காட்டலாம்.எமது பெண் எழுத்தாளர்களைப் பொறுத்தவரை அதுவும் முஸ்லிம் பெண் படைப்பாளிகளைப் பொறுத்தவரையில் சிறுகதை படைத்தளிப்போர் எம்மத்தியில் மிகக் குறைவு என்று தான் கூறவேண்டியுள்ளது.எமது பெண் படைப்பாளிகள் அதிகமாகம் கவிதைகளையே எழுதிவருகின்றனர்.சிறுகதைகள் அல்லது நாவல் என்று வரும் போது வெகுசிலரே எம் மனக்கண்முன் நிற்கின்றனர்.ஒரு நயீமா சித்தீக்கும் ஒரு சுலைமா ஏ ஸமீயும்,ஒரு கெக்கிராவை ஸஹானாவும் ஒரு மஸீதா புன்னியாமீனும்  ஒரு புர்கான் பீ இப்திகாருமே குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் சிறுகதை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.நான் குறிப்பிடும் இவர்கள் அனைவரும் சிறுகதைத் தொகுப்புக்களையும் வெளியிட்டுள்ளனர்.கலைமகள் ஹிதாயா றிஸ்வி,எம்.ஏ. ரஹீமா,சம்மாந்துறை மசூரா, சித்தி ரிஜா,காத்தான்குடி நஸீலா,ஜரீனா முஸ்தபா,ஜெனீரா அமான்,பௌசியா நூர்தீன்,சர்மிளா ஸைத் போன்ற  சில நல்ல சிறுகதை ஆசிரியைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிரகாசித்தாலும் இன்னும் இவர்கள் இலைமறை காய்கள் என்றே கூறவேண்டியுள்ளது.திருமதி ஸக்கியா சித்தீக்,ஒரு பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்.தமிழ் மொழியை நன்கு கற்றவர் உண்மையில் எனக்கு ஆச்சிரியமாகத்தான் இருக்கிறது.சிறுகதை எழுதும் ஆற்றலும் ஆளுமையும் கற்பனை வளமும் கதை கூறும் பாங்கும் வைக்கப் பெற்ற இவர் ஏன் இது கால வரை பத்திரிகைகளுக்கு எழுதாமல் இருந்தார் என்பது தான்.ஆனால் இத்தொகுப்பின் மூலம் இவரது மேதாவிலாசம் நாடெங்கும் துலாம்பரமாகத்தான் போகிறது.அன்றாட நடைமுறைகளை யதார்த்த பூர்வமாகச் சொல்கிறார்.தனிமனித அவலங்கள்,சமூக நெறிமுறைகள்,மனித நேயமும் அதற்கெதிரான நடத்தைகளும்,கழிவிரக்கம் போன்ற கருத்தியல்கள் இவரது கதைகளில் விரவிக்கிடக்கின்றன.உதாரணமாக திசைமாறிய பறவை,இணங்கிப் போ மகளே,கோக்கி யார்? போன்ற கதைகள் குறிப்பிடத்தக்கவை."காலத்தின் கோலம்"என்ற சிறுகதை நகைச்சுவைரசம் சொட்ட எழுதிப்பட்டுள்ளது.சிறிய சிறிய பந்திகளாக "விறு விறு"என்று கதை சொல்லப்படுவதனால் வாசகர்களது மனதில் ஓர் ஆவலைத்தூண்டி முழுக்கதையும் ஒரே மூச்சில் வாசித்து விடவேண்டும் என்ற எண்ணக்கருவை ஏற்படுத்துவதில் கதாசிரியை வெற்றிகொண்டுள்ளார் என்றே கூற வேண்டும்.திருமதி ஸக்கியா சித்தீக்கின் கதை சொல்லும் ஆற்றல் மேலும் விரிவடைந்து இன்னும் சில சிறந்த தொகுதிகளை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இத் தொகுப்பின் வெற்றிக்கு எனது ஆசிகளை வழங்குகின்றேன்.

ஞாயிறு, 10 ஜூலை, 2011

மூடு திரை

நூல்: மூடு திரை (சிறு கதை தொகுதி)
 ஆசிரியர்: மஸீதா புன்னியாமீன்
நூல்ஆய்வு : கலைமகள்ஹிதாயாறிஸ்வி

வானைத் தொட்டு  விட வேண்வாக் கொண்டுவளர்ந்த மலைகள், அதில் தங்கி களைப பாற்றிக் கொள்ளும் வெண் பஞ்சு முகில்கள்,பொன் வண்ண மழை மங்கையின் மேனியெங்கும் போர்த்தியிருக்கும்,தேயிலைப் பசும் பட்டாடைகள் தாயின் மார்பில் ஊறிச் சுரக்கும் ஜீவ அமுதம் போல் மழை மாதாவின் இதயத்தில் ஊறிச் சுரந்து ஓசையிட்டுப் பாடி வரும் குளிர் நீர் அருவிகள்.இயற்கையும்,செயற்கையு
ம் இணைந்து கை கோர்த்து களி நடம் புரியும் கவின் மிகு காட்சிகள்.இந்த அழகு ஓவியம் நிறைந்த மலையகத்தை வசிப்பிடமாக கொண்டவர் மஸீதா புன்னியாமீன். காலி கட்டுக் கொடையை பிறப்பிடமாக கொண்டவர்.கணித விஞ்ஞான ஆசிரியையான இவர்  80 காலப் பகுதியில் கலையுலகில் பிரசித்தார்.இலங்கையிலுள்ள முஸ்லிம் எழுத்ததாளர்களை விரல் விட்டு எண்ணும்போது இவரும் ஒருவர்.அழகான பார்வையும்,அறிவுக் கூர்மையும்கொண்ட ஆளுமைமிக்க எழுத்தாளராய்,கவிஞராய் தன் ஆற்றலை அகலப்படுத்திக் கொண்ட இவரது கவிதைகளும் கதைகளும் காத்திரமான கருத்தாலமிக்கது.சமுதாயத்தின் சரிவுகளும் சஞ்சனங்களும் இவரது கதைகளில் நிறைந்து காணப்படும்.பெண்ணியத்தை கண்ணியமாய் மதிக்கத் தெரியாத காட்டு மிராண்டித் தனம்,காடைத்தனம்,சமுதாய அடக்கு முறை,ஒடுக்கு முறை ஆகியவற்றிற்குத் தீர்வு காணும் பாங்கில்,இவரது கதை போக்கு சரிவில்லாமல் வளர்ந்து செல்லும்."நாளைய சந்ததியின் இன்றைய சக்தி"என்ற இலச்சினையோடும்,இலட்சியத்தோடும் இடையுறது உழைத்து வரும் "சிந்தனை வட்டத்தின்"298 வது வெளியீடாக மஸீதா புன்னியாமீனின் "மூடு திரை"எனும் சிறுகதைத் தொகுதி.இந்த தொகுதியில் 09 சிறுகதைகள் மாத்திரமே இடம் பெறுகின்றன. அவற்றில்,"நிலவுக்கொரு மூடுதிரை"எண்ணும் தலைப்பிலான சிறுகதை,விதவை சமீராவின் விசும்பலை,விரக்தியை வெளிப்படுத்தி நிற்கின்றது.வாழாவெட்டியாய் வயிற்றுப்பாட்டுக்குவழி தேடியவாறு வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் வனிதையரின் வாழ்க்கைச் சவடால்கள் கதைக் கருவாய் சுட்டப்படுகின்றன.
                                       ".........அந்திப்பட்டா ஊட்டோட வாசலோட அடங்கியிருக்காம,எங்க போய் தொலஞ்சண்டு......கேட்டன்.கண்ட கண்ட கழுதயெல்லாம் ஒண்ட உம்மா எப்படி ஈக்கா என்று சாட கேக்கிறானுவள்.வாப்பா இல்லாமப் போனபொறவு நீங்க முந்தி மாதிரி இல்ல...இப்ப..."
 மண்வாசனை சொற்களோடு கூடிய இக்கதை,விதவைகளுக்கு மறுமணம் அவசியம் என்பதை வலியுறுத்தி நிற்கின்றது."கறைகளும் கரைகளும்"என்னும் கதையில் வரும் கதாபாத்திரங்கள் மனதைத் தொடுகின்றன.தளர்ச்சி கண்டு தள்ளாடும் தந்தையைத் தணியாத தாட்சணியத்தொடு தாபரிக்கும் தனயன்,அவனது அன்புக்கு அடிமையாகி,அடக்கவொடுக்கமாய் மாமனாரை மதித்து மரியாதை செய்யும் மனைவி -மக்கள் என,படைக்கப்பட்ட கதா பாத்திரங்கள் ஒரு குடும்பத்தில் இருந்தால்,அதுவே பெரும் மன நிறைவைத் தரும்."நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்"என்பதற்கு இந்தக் கதை அழுத்தம் கொடுக்கின்றது.கதாசிரியை மஸிதா புன்னியாமீன்,சுனாமிப் பேரலைச் சூறையாடலையும் சொந்த வாழ்வில் கண்டு,சொந்த பந்தங்களை இழந்து சொகித்த்தவர்.அந்த அனுபவத்தின் அவதிப்பாட்டை அவர் "முகவரியில்லா முகம் "என்ற கதையில் வேதனை விசும்பலோடு வெளிப்படுத்தியுள்ளார்.காலி மாவட்டக் கட்டுக் கொடைக் கடற்கரை உறவினரைக் காவு கொண்ட உண்மைச் சம்பவத்தை அக்கதையில் நாம் காணலாம்."துருவங்கள்"என்னும் கதையில்,இரு வேறு கதாபாத்திரங்கள் கொள்கை ரீதியாக வேறுபட்டு நிற்கின்றன.அளவோடு குழந்தைகளைப் பெற்று,வளமோடு வாழ வேண்டுமென எண்ணும் தாய் ஒரு புறம்."இறைவன் தருகிறான்.நாங்கள் பெறுகிறோம்....."என்ற வீறாப்புடன் வாயாடி அளவுக்கதிகமாகக் குழந்தைகளைப் பெற்று,பேணி வளர்க்க தெரியாத தாய் ஒரு புறம்.இரு சாராரும் வெவ்வேறு துருவங்கள் என்பதைக் கதாசிரியர் சுட்டியுள்ளார்.உருவம்,உள்ளடக்கம்,உத்திமுறை அனைத்தும் ஒவ்வொரு கதையிலும் உள்ளத்தைத் தொடும் அளவுக்கு உயர்ந்து நிற்கின்றன.மஸீதா புன்னியாமீன் படைத்த சிறுகதைகளில்,நீதி,நியாயம்,நேர்மை நிறைந்த நியம வாழ்வை  நாம் தரிசிக்க முடிகின்றது."நெருடல்கள்"என்னும் தலைப்பில் அமைந்த கதை வேலைக்கமர்த்தப்பட்ட ஏழைச் சிறுவனைப் பற்றியது.அச்சிறுவன் வீட்டுக்காரியல் ஏச்சுப் பேச்சுக்களால் துன்புறுத்தப் படும் போது,அவளின் மகள்,அந்த "எத்தின்"மீது கழிவிரக்கங்கொண்டு தாயைக் கண்டிக்கின்றாள்;உழைக்கும் வர்த்தகத்துக்கு உதவிக் கரம் நீட்டும் உயர்ந்த மனம் படித்தவளாய் விளங்குகிறாள்.உழைக்கும் வர்க்கத்தை உதாசீனப்படுத்தாமல்,ஒறுத்து நோக்காமல்,உயர்வை என்ன வேண்டும்;என்ற உயர்ந்த மனப்பாங்கை "சுகமாகிப் போன சுமை"என்ற கதை மூலம் சுட்டிக் காட்டியுள்ளார் மஸீதா புன்னியாமீன் .கதையில் வரும் கதாப்பாத்திரமான கபீர் மாஸ்டர்,தனது அந்திமகாலத்தில் தனக்குரிய வீடு வாசலை நாகூர் பிச்சை என்ற தனது அடிமைக்கு உரித்துடையதாய் உறுதி முடித்து வைக்கிறார்.அவரது மக்கள் தந்தையின் உயர்வான எண்ணத்தை மதித்து,அந்த வேலைக்காரனை உறவுக்காரனாய் அணைத்துக் கொள்கின்றார்கள்.இவ்வாறு,ஒவ்வொரு கதையும் ஒழுக்க மேம்பாட்டையும்,ஒப்ப செப்பமான உயர்ந்த வாழ்க்கைப் போக்கையுமே வலியுறுத்தி நிற்கின்றன.சிறந்த சிறுகதைத் தளத்திற்குச் சோடினை தேவை இல்லை;சுற்றி வளைத்துச் செல்லும் சாகசம் தேவையில்லை.சுவைஞனின் சுவைப்புலத்தைச் சுவீகரித்துக் கொள்ளும் சொல்லாட்சி மட்டும் இருந்தாற் போதும்.இந்த இலாவணியமும்,இரசனையும் இழையோடியணவாய் தோப்பில் மீரான்,சுஜாதா முதலானோரின் கதைகளில் அந்த அழகை நான் கண்டு மகிழ்கின்றேன்."கரும்புள்ளிகள்"என்னும் தலைப்பில் அமைந்த கதைக் கரு இதற்கு நிதர் சமனாகும்.மானிடத் தளம்பல்கள்,மனக்குழப்பங்கள்,மானிதப் பண்புகள் முதலானவற்றைக் கதாசிரியர்கள் கற்பனையில் படைக்கும் போது கையாளும் உத்தி முறைமை ஆளுக்காள் வேறுபடுவதை நாம் காணலாம்.கதாபாத்திரக் கூற்றாக வெளிப்படுவான இன்னும் சில.இந்த இருமுகத் தன்மையும் மஸீதா புன்னியாமீன்  கதைகளில் வெளிப்படுவதை நாம் காணலாம்.சோடை போகாத சுவைத் தன்மை இவரது கதைகளில் நிறைந்துள்ளன.அவரது ஆற்றல் முக்கையுச் சிறைக்குள் மூடுண்டு போகாமல்,முகத்திரைக்குள் முடங்கிவிடாமல் முகதரிசனம் தர வேண்டுமென முழுமனதாய் வேண்டுகின்றேன்.
                                                                    இதயம் பிழிந்து வாழ்த்துகிறேன்.

மலைச் சுவடுகள்

நூல்: மலைச் சுவடுகள்.
ஆசிரியர்:மாரிமுத்து சிவக்குமார்.
நூல் ஆய்வு:கலைமகள் ஹிதாயா  றிஸ்வி.


இலங்கையின் இன்றைய தமிழ் இலக்கியப்  பரப்பினை நாம் அவதானிக்கும் போது கலை இலக்கியப் படைப்பாளர்களின் பெருக்கம் (தொகையளவில்) மிக...மிக... குறைந்து கொண்டே செல்வதை அவதானிக்கலாம்.

அதே நேரம் கடந்த 70 தொடக்கம் 85 வரையிலான காலகட்டத்தில் படைப்பாளிகளின் தொகை அதிகளவு அதிகரித்துச் சென்றமையை நாம் மறந்து விட முடியாது.
அன்று இருந்த கலை இலக்கிய துடிப்புக்கும், இன்றுள்ள கலை இலக்கிய துடிப்புக்கும் எவ்வளவோ  வித்தியாசம். அன்று இலக்கியமே இலட்சியமாய்,இலட்சியமே  இலக்கியமாய் இருந்தது.

பல பத்திரிகைகள் போட்டிபோட்டுக்கொண்டு இளம் படைப்பாளர்களது வளர்ச்சிக்கு களம் அமைத்துக் கொடுத்தன. இலங்கையின் பல இடங்களில் இருந்தும் சஞ்சிகைகளின் வரவு அதிகரித்துக் கொண்டே இருந்தன.
ஆனால் இன்று எவ்வளவோ வித்தியாசமாக மாறிப் போயுள்ளதை உணர்கின்றோம்.வாசிப்புத்தன்மை எம் மத்தியில் குறைந்து கொண்டே செல்கின்றது.சின்னத்திரைகளில் ,படங்களையும்,நாடகங்களையும் இன்று பார்ப்பதில் காலமும் நேரமும் செல்கின்றது.
அன்றைய தரமான கவிஞர்களும் ,சஞ்சிகைகளும் இன்று எங்கே?
இன்று வளரத்துடிக்கும் கலையுள்ளங்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் ஊடகங்களும் ,கலை இலக்கிய பிரசுரங்களும் மிகமிகக்  குறைவாகவே காணப்படுகின்றன.வளரத் தகுதியானவர்கள் கூட வித்திலே சிலரால்  தோண்டப்படுகின்றனர்.நாமங்களைக் கொண்டு தரமானப் படைப்புக்கள் கூட சில தீய சக்திக ளினால் புதைக்கப்படுகின்றன.இதனால் புதிய தலைமுறையினருக்கு களம் அழிக்கப்படுகின்றது.
இந்திய கலைஞர்களான வைரமுத்து ,மு.மேத்தா,அப்துல் ரஹ்மான் போன்றோர்களது நூல்களுக்கு கொடுக்கும் வரவேற்பு  ஏன் இலங்கை கவிஞர்களது எம் தேசத்தில் கிடைப்பதில்லை ஏன் அவர்களுக்கு நேசக் கரம்  நீட்டுவதில்லை!
இலக்கியத் தாகம் எம் மண்ணில் வற்றிவிடக் கூடாது! அழிந்து வரும் மொழிகளில் எம் தமிழ் மொழி தொலைந்து  விடக் கூடாது.இதை எம் மண்ணில் வாழும் கலை உள்ளங்கள் உணர வேண்டும்.சில தரமான கலை உள்ளங்களை இன்றைய சூழ்நிலைகளில் "சிந்தனை வட்டம் " இனம் கண்டு அவர்களது படைப்புக்களை முடிந்தளவு  நூல்களாக வெளியிட்டு வருவதையிட்டு  நாம் சந்தோசப்படுவதுடன் உதவிக் கரங்களையும்  நீட்ட வேண்டும்.இந்த வகையில் இலங்கையில் கூடியளவு நூல்களை வெளியிட்டு வரும் "சிந்தனை வட்டம்"மலையக மண்ணில் பிறந்த மாரிமுத்து சிவக்குமாரின்  மலையகச் சுவடுகள் எனும் கவி நூல் சிந்தனை வட்டத்தின் 204 வது  வெளியீடாக மாரிமுத்து சிவக்குமாரின் முதலாவது கவிதைத் தொகுதி வெளி வந்துள்ளது.ஆம் மலையக கலை இலக்கிய படைபாளர்களின்  வரிசையில்  அமரர்கள் ,க. ப.லிங்கதாசன் ,குறிஞ்சி தென்னவன்,மற்றும் ஹலிம்தீன் ,பண்ணாமத்து  கவிராயர் போன்ற பல கவிஞர்கள் தரமான கவிதைகள் மூலம் குரல் கொடுத்துள்ளார்கள்.அவர்களது வரிசையில் ஓர் வாரிசாக சிவக்குமாரை சேர்க்கலாம்.ஆம் மாரிமுத்து சிவக்குமாரின் கவிதைகளில் சமூக நோக்கும்,இன,மொழி,மத,பேத மற்ற மானிட நேயமும் வெவ்வேறு வகைகளில் கவிதைகள் முழுவதும் இழையோடி நிற்பதை அவதானிக்கலாம்.
அவ்வப்போது தினசரிகளிலும் ,சஞ்சிகைகளிலும் ,மலர்களிலும் வெளிவந்த கவிதைகள்  பல இத்தொகுதியில் அடக்கப்பட்டுள்ளன.எமது நாட்டிலும் ,அப்பாலும் தான் பிறந்த மண்ணிலும் இடம் பெற்று வந்துள்ள நிகழ்வுகளின் ஒரு வெட்டுமுகத்  தோற்றமாக இந்நூலிலுள்ள கவிதைகள் விளங்குகின்றன.சிவக்குமாரின் கவிதைகளில் முதிர்ச்சித்தன்மையினைக் காண முடிகின்றது.சமூக அவலங்களையும் ,மூடநம்பிக்கைகளையும்  ஒரு தேர்ச்சி பெற்ற திரைப்பட இயக்குனரைப்  போல கவிதைவடிவில் படம் பிடித்துக் காட்டுவதில் வெற்றி பெற்றுள்ளார்.கவிஞர் தாம் வாழும்,தாம் காணும், தாம் அனுபவிக்கும் மலையகத்தை அப்படியே வாசகர் முன் நிறுத்துவதற்குத் தமது கவிதைகள் மூலம் முயற்சிக்கிறார்.மலையகத்தின் சோக வாழ்வியலைத் தமது கவிதைகள் தோறும் படம் பிடிக்க முனைந்துள்ளார்.மலையகம்  எதிர் காலத்தில் புதுமைகளை ,மாற்றங்களைக் காண வேண்டும்.என்ற தமது  தணியாத தாகத்தையும் கவிதைகள் மூலம் வெளிப்படுத்துகின்றார்.மலையகத்
தைப் பாதிக்கும் விடயங்களை விட்டொழிக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார். மலையகம் தொடர்பான பல கவிதைகள் இத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் ஆத்மாவையே அழித்தொழிக்கும் முறையில் நீண்ட காலம் நிலை பெற்று வந்த போர்,எண்ணிறைந்த உடல் அழிவுகளையும்,உடமை  அழிவுகளையும்,உள அழிவுகளையும், ஏற்படுத்தியது.இப்போது போர் ஓய்ந்துள்ள போதிலும் போர் அபாயம் இன்னும் நீங்கிட வில்லை.என்றைக்கும் 'போர் வேண்டாம்' என்று  தான் மனிதாபிமான  இதயங்கள் அனைத்தும் கருதுகின்றன.கவிஞனின் வகையில் கவிஞர் சிவகுமாரும் யுத்தத்தைப் புறக்கணிப்பதில் ஆச்சிரியப்படுவதற்கில்லை.' யுத்தத்தைப் புதைப்போம் ' என்ற கவிதையில்  தனது மனிதாபிமான உணர்வை அவர் புலப்படுத்துகிறார். கவிஞர் மலையகத்தில் பிறந்தவர் என்பதால் இக் கவிதைத் தொகுதியில் கணிசமானவை மலையகத் தொழிலாளர்கள் , மலையகத்து அவலங்கள் பற்றியவையே! மானுட நேயம் மிக்க எந்த ஒரு கவிஞனையும் ,தம்மால் ஈர்க்கத்தக்க  அளவிற்குத் துன்பக்  கேணிகளாகவும்  ,அவலங்கள்,சோகங்கள்,சோதனைகள்,வேதனைகள்  முதலியவற்றின்  மொத்த உருவங்களாகவும் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மலையகத் தொழிலாளர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மாரிமுத்து சிவகுமார் தன் கவிதைகளை உருக்கமாக மனம் திறந்து தந்துள்ளார்.
                                                       லயத்துச் சிறைகள் கவிதையில்,
                                                       சிறைகளில் வாழும்
                                                       கைதிகளைப் போல்,
                                                       எங்கள் வாழ்க்கையின்
                                                       உரிமைகளை எல்லாம் -இந்த
                                                       லயச்சிறைக்குள்ளேயே வைத்து
                                                       கவ்வாத்து வெட்டுகின்றனர் !   
     
மனத்துயரம் கவிதையில்  தெரிகின்றது மனம் வெதும்பிப் பாடியுள்ளத்தையும் நாம் மனங்கொள்ளல் வேண்டும்.உதாரணத்திற்குச் சிலவற்றை காணலாம்.         
                                                        மலைச்சுவடுகளும் கவிதையில்
                                                        உழைப்பின் ஏணிகள்தான்

                                                        எங்களது
                                                        கருவறைகள்
                                                        அந்த ஏணியே
                                                         ஊனமாகும் போது
                                                         எங்கள் உருவங்கள்.
                                                         எப்படி முழுமை பெறும்....?

                                                  
                                                         இல்லாத உரிமையெல்லாம் எந்நாளில் மீண்டிடுமோ....?
                                                         எனும் இன்னொரு கவிதையில்,
                                                         வாழ்வதுவோ
                                                         ஒரு கூடை கொழுந்துக்குள்ளே
                                                         சாய்வதற்கோ இடமில்லை.
                                                         லயத்துக்குள்ளே....
                                                         வீழும்வரை விதியின்பாதையிலே
                                                         நடந்து செல்ல
                                                         மிரட்டி மிரட்டி
                                                         ஓரங்கட்டபலபேர்.


இப்படி மாரிமுத்து சிவகுமாரின் பல கவிதைகள் துயரத்தை தருகின்றன.
முடிவாக;
                     
ஆழமான ,சமூக பார்வை மிக்க,முழு மனிதயினத்தை  யோசிக்கத் தூண்டும் கருத்துக்களை இவரது அனுபவம் நிச்சயமாக பலருக்கும் கற்றுக் கொடுக்கும் நல்ல பல தரமான கவிதைகளை இவரிடமிருந்து நான் மேலும் எதிர்பார்க்கிறேன். "மலைச் சுவடுகள்" என்ற இக்கவிதைத் தொகுதி மாரிமுத்து சிவகுமாரின் ஆரோக்கிய வளர்ச்சியினைக் காட்டுமென்று நம்புகின்றேன். கவித்துவ வீறும். கருத்து வீச்சும் ஆழ்ந்த சமூகப் பார்வையும் கொண்ட கவிதைகள் பலவற்றை மேலும் தந்து ஈழத்துத் தமிழ்க் கலையுலகிற்கு வளம் சேர்ப்பார் என நம்புகிறேன்.
                  

பூ முகத்தில் புன்னகை

 நூல்:பூ முகத்தில் புன்னகை
நூலாய்வு
:கலைமகள் ஹிதாயா றிஸ்வி
நூலாசிரியர்:இன்ஷிராஹ் இக்பால்


"கலையுணர்வு என்பது இறைவனின் மாபெரும்
அருட்கொடைகளில் ஓன்று அந்த வகையில்
இயல்பாகவே கலைகளின் மீதான ஆர்வமும்
ஆற்றலும் கைவரப் பெற்றவர் இந்நூலின்
ஆசிரியையான இன்ஷிராஹ் இக்பால்."

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவ  படைப்பாளி இன்ஷிராஹ் இக்பால் அவர்களின் பத்து சிறுகதைகள் தொகுப்பாக" பூ முகத்தில் புன்னகை" எனும் சிறுகதை நூலாக வெளிவந்துள்ளது."சிறுகதைகள் வாசகர் மனதில் இசைவையும் அசைவையும் ஏற்படுத்த வேண்டும்"என்ற ஜெயகாந்தனின் கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் கதைகள் யாவும் மனதுள் ஊடுருவி நிற்கின்றன.தேர்ந்த ஒரு சிறுகதைப் படைப்பாளியின் கதைகளைப் பார்ப்பதைப் போன்ற உணர்வையே ஏற்படுத்துகின்றது.தாயைப் போல் பிள்ளை நூலைப் போல் சேலை என்பதைப் போல் இம் மாணவ படைப்பாளி,தனது ஆசான்களையும் கலையுலகில் மின்னி நிற்கும் தனது தாயாரையும்,இலக்கிய ஆர்வலரும் வெளியீட்டாளருமான அன்புத் தந்தையும் வழிகாட்டலாக ஏற்று பயணித்துள்ளமை மனதுக்கு நிறைவைத் தருகின்றது.அதனால் தான் அவரால் ஒரு காத்திரமான படைப்பைத் தர முடிகின்றது.கதாசிரியை தனது உரையில் கூறியுள்ளது போல தான் கேட்ட,அனுபவித்த,மனதைப் பாதித்த சிறு சிறு சம்பவங்களையே கதைகளாக முன் வைத்துள்ளார்.அனைத்தும் உள்ளத்தை உருக்கும் விதத்தில் தத்ரூபமாகத் தரப்பட்டுள்ளன.தனது கதையோடு வாசகர்களை பதட்டத்துடன்,நெகிழ்வுடன் அழைத்துச் செல்லும் பாங்கில் 'கரு'அமைந்துள்ளமை பாராட்டத்தக்கது."பூ முகத்தில் புன்னகை"என்ற கதையில் பெற்றோரால் புரிந்து கொள்ளப்படாத ஆகாஷின்  மனநிலையைக் காட்ட கதாசிரியை கையாண்டுள்ள உத்தி உன்னதமானது.ஆகாஷின்  கரடி பொம்மையிடம் மனத்தில் உள்ளதைக் கொட்டும் போது,எமது விழிகள் நீரைக் கொட்டுகின்றன.ஒரு கணம் எமது இதயம் குலுங்கி நிற்கின்றது.புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர் செக்கோவின் கதையிலே கதாநாயகன் தன் மனக்குறையை குதிரையிடம் சொல்ல முனைகின்ற காட்சி மனக்கண்களிலே நிழலாடுகின்றது.ஊனமாகிப் போன சிறுவன் ரஸீனை ஒதுக்குகின்ற மனித ஊனங்களின் கோணலை நிமிர்த்த அவனைப் புலமைப் பரிசில் பரீட்சையில் முதற்தர மாணவனாக அரவணைக்கும் கட்டம் சிலிர்க்க வைக்கின்றது.திறமையில் திடமான நம்பிக்கை வைத்து,ஏனையவற்றை மறந்த மபாஸூக்கு மறதியை ஏற்படுத்தி படிப்பினை ஊட்டும் உத்தி அபாரமானது.அதே போல வாசகர்களை ஒரு வகையான மனப்பதட்டத்தோடு,அதீத ஆர்வத்தோடு கடைசிக் கட்டம் வரை நகர்த்திச் செல்கின்ற உத்தி மிக அற்புதம்.'உணர்வுகள் ஊமையாக்கப்பட்ட போது'என்ற கதையில் தான் பாடுகின்ற நிகழ்ச்சியை பார்க்கத் துடிக்கும் பாலாவுடன் சேர்ந்து கதாசிரியை எம்மையும் துடிக்க வைக்கின்றார்.நிகழ்ச்சி ஆரம்பமாகும் நேரத்தில் எசமானி அம்மாள் கடைக்கு அனுப்புகின்றாள்.மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.'அடுத்ததாக ஒரு இனிமையான பாடல் இதோ........'என்ற போது பாலாவின் இதயத்தில் மட்டுமல்ல எம் இதயத்துள்ளும் குதிரை ஓட வைக்கின்றார் கதாசிரியை.'தலைக்கணமா............? தன்னம்பிக்கையா...........?'என் ற கதையில் பரீட்சை நேரத்தைத் தவற விட்ட மபாஸ் பதறி அடித்துக் கொண்டு வீட்டுக்குப் போகிறான்.வீடு பூட்டிக் கிடக்கிறது.அடுத்த வீட்டுப் பெண்மணி ஆறுதலாகத் திறக்கும் வரை அவன் நிலை கொள்ளாமல் தவிக்கின்றான்.பரீட்சை மண்டபம் செல்லும் வரை அவனோடு சேர்ந்து எம்மையும் தவிக்க வைக்கிறார் கதாசிரியை.கற்பனை கலக்காத யதார்த்தமான வசனங்கள்.ஒவ்வொரு வாசகனும் தனக்கு ஏற்பட்டதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் சிறந்த உத்தி கதாசிரியையின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி.உத்திக்குத் தேவையான அளவு,அவசியமான அளவு பாத்திரங்களையே கதையில் புகுத்த வேண்டும்.பாத்திரங்கள் கூடும் போது வாசகர்களுக்கு மயக்க நிலை ஏற்படும்.திரும்பவும் ஆரம்பத்தில் இருந்து பாத்திரங்களை மனத்தில் உறுதிப்படுத்தி நிலைப்படுத்த முயற்சிக்கும் சங்கட நிலைமை உருவாகும்.இவ்வாறான நிலைமையை இச் சிறுகதைத் தொகுப்பில் காண முடியாமை சிறப்பு.இச் சிறுகதைத் தொகுப்பில் நல்ல வசனங்கள் பயன் படுத்தப்பட்டுள்ளமை கதைகளுக்கு மெருகூட்டுகின்றன.திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டுகின்றன.பதச் சோறாக அவற்றுள் சில இதோ...........
                              
                          "அவன் பாடும் போது,தேனில் முக்கிஎடுத்த இனிப்புப் பலகாரத்தை கரும்புடன் சேர்த்துச் சாப்பிடுவது போல இனிக்கும்".
"அவன் பிஞ்சு நெஞ்சம் கற்பனை மஞ்சத்தின் பஞ்சனையில் பென்ச் போட்டு உட்கார்ந்திருந்தது."
"இருதுளிக் கண்ணீர் பீறிட்டுப் பாய்ந்து,கன்னங்களின் கால்வாய் வெட்டி கழுத்து வரை நனைத்து காணாமற் போனது."
"தலைப்பிரசவத்திற்கு காத்திருக்கும் தாயின் தவிப்பு அவனது நடத்தைகளில் இழையோடியது."
"குச்சித் துண்டா இருந்தாலும் குருமனலாய் இருந்தாலும் என்னோட பிள்ளை."
"பை நிறைய நிதியும்,மனம் நிறைய சாதியம் என வதியும் வருமானக்காரர்.:
"விரட்டி ஏசும் வித்தையும்,வாடிக்கையாளரிடம் புரட்டிப்பெசும் தந்திரமும்"
"செருப்பு தற்கொலை மூலம் தனது தவணையை முடித்து விட்டிருந்தது.
இவ்வாறு கதாசிரியையின் கவித்துவமான சொல்லாட்சி முழுத்தொகுப்பிலும் விரவிப்பரவிக் கிடக்கின்றன.பெயர் பெற்ற எழுத்தாளர்களின் எழுத்துக்கு நேருக்கு நேர் நின்று சவால் விடும் வித்தகமான வசனங்கள்.சிறுகதைகள் என்ற போர்வையில் திண்ணைக் கதைகளைத் தரும் இளம் படைப்பாளிகள் ஊன்றி அவதானிக்க வேண்டிய மொழிநடை,இச் சிறுகதைத் தொகுப்பை எழுதத் துடிக்கும் மாநாவப் படைப்பாளிகள் பயிற்சி நூலாக ஏற்றுக் கொள்ளக் கூடியதென்பது என் மேலான சிபாரிசு.தமிழகத்தின் முதுபெரும் எழுத்தாளர் 'மஹதி'பின்வருமாறு கூறுகின்றார்."சிறந்த வசனங்கள் கதை மாளிகைக்குப் பூசப்படும் பெயின்ட்,வர்ணங்களை எங்கெங்கே எப்படிப் பூச வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.அதே போல கதை சுவையாகத் தொடர வேண்டும்.அதிசயிக்கத் தக்க திருப்பத்துடன் முடிவடைய வேண்டும்.கதையைப் படித்து முடிந்த பின்பு நல்ல கதையைப் படித்தோம் என்ற திருப்தி ஏற்பட வேண்டும்"என்கிறார்.இன்ஷிராஹ் இக்பால் தனது கன்னிப் படைப்பின் மூலம் மஹதியின் கருத்தை நிறைவேற்றியுள்ளார். இன்ஷிராஹ் என்ற இலக்கிய இளம் தளிர் விருட்சமாய் வளர்ந்து மிளிர வாழ்த்துக்கள்.

இந்த நூலின் விலை"150 /=
தொடர்புகளுக்கு:எக்மி பதிப்பகம்
                                19 .கமன்தெனிய வீதி,
                                 கிருங்கதெனிய மாவனல்லை.
                                  இலங்கை .
                                  தொலைபேசி:035 - 2246494
                         gmail:acmipublication@gmail.com

திங்கள், 4 ஜூலை, 2011

நூலாய்வு...

நூல் :உன்னை நினைப்பதற்கு
தொகுப்பாசிரியர்: மருதூர் ஏ.எல். அன்ஸார்நூல் ஆய்வு : கலைமகள் ஹிதாயா றிஸ்வி

தென்கிழக்கு பிரதேசத்தின் கவிதைத் தொகுப்பு "உன்னை நினைப்பதற்கு"
இன்றைய நவீன உலகில் தகவல் தொழில் நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி
நாளுக்கு நாள் அதிகரித்து முழு உலகையும் வினாடிப் பொழுதில் கண்டுகொள்கின்ற
 எமது சமூகத்தின் மத்தியிலிருந்து இவ்வாறான எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி
 அவர்களின் படைப்புக்களை தொகுத்து ஆவணப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில்
தன்னை அர்பணித்துக் கொண்டிருக்கும் மருதூர் ஏ.எல் அன்ஸார் அவர்களைப் பாராட்டுகின்றேன். எழுத்தாளர்களின் பேனா முனைகள் அம்புபோல் பாயும் என்பார்கள் அதனை ஒத்ததாக
 தாங்கள் கவிதையுடன் மட்டும் நின்று விடாமல் எமது சமூகத்தின் கல்வி,கலாச்சார,
சமூக,பிரதேச ஒற்றுமை.இதர அபிவிருத்திகள் போன்றவற்றினையும் தங்களுடைய பேனா
 முனைகள் ஊடாக வெளிக் கொண்டுவரவேண்டும்.உன்னை நினைப்பதற்கு தொகுதியில்
மொத்தம் 27 கவிஞர்களின் கவிதைகள் இத்  தொகுதியில் இடம்பெற்றுள்ளன.அவர்கள்,
கவிஞர்.மருதூர் ஏ.எல் அன்ஸார்,கலைமகள் ஹிதாயா றிஸ்வி,கவிஞர்.யூ.எல்.எம்.பைஸர்
,
கவிஞர்.முகம்மது நவாஸ் (ஸிஹாப்),கவிதாயினி சுல்பிகா ஷெரீப்,கவிஞர்.எம்.ஐ.எம்.முஜீப்,
கவிதாயினி மாஹிரா முஜீப்,கவிஞர்.சம்சுதீன் ஜனூஸ்,கவிதாயினி சப்னா அமீன்,
கவிதாயினி தர்பா பானு,கவிஞர்.ஏ.எல்.ஜாபீர்,கவிதாயினி சுஹைதா  ஏ.கரீம்,
கவிதாயினி பாயிஸா  அலி,கவிஞர் வதுறுதீன் முகம்மத் றியாத்,
கவிஞர் கே.எம்.முகம்மத் சித்தீக்,கவிஞர். ஐ. முஹைதீன்,கவிதாயினி
 அமானுள்ளா சுஜானா,கவிதாயினி எம்.எம்.எஸ்.பஸினா,கவிதாயினி எம்.எச்,ஜிப்ரியா
,கவிதாயினி தங்கராசா மெரீனா,கவிதாயினி மர்சூகா ஜெமீல்,கவிதாயினி ந.பவதாரினி,
கவிதாயினி றிஸ்வியா தாஹிர்,கவிஞர்.சமீம் முஹம்மட் சனீம்,
கவிதாயினி றிம்ஷா முஹம்மட்,கவிதாயினி எச்.எப் றிஸ்னா,
கவிஞர்.ரபீக் மொஹிடீன் இந்த கவிஞர்களுள் பலரது கவிதைகள்
வளரக்கூடிய தன்மை விளங்குகிறது.சில வளர்ந்த கவிஞர்களினதும்
கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
அவற்றுள்,
  சுஹைதா ஏ.கரீமின் கவிதை
வாக்குக் கேட்டு வாஞ்சையுடன்
வாசல் வரை வருகிறார்
வார்த்தையாகவே ஜாலம் காட்டி
வாக்குப் போட கெஞ்சுகிறார்...வெற்றி பெற்றால்
வெட்டிப் பேச்சு போலவே
வாக்கு மாறி,வந்தவரை
வேங்கையாகப் பாய்கிறார்..

கலைமகள் ஹிதாயா றிஸ்வியின்  வரிகள்...
கூடிய விரைவில்
வாழ்க்கையின் சோதனைகளையும்
வேதனைகளையும்..
துயரங்களையும்..
துன்பங்களையும்..
கஷ்டங்களையும்..
நஷ்டங்களையும்..
ஒன்றாக மூட்டை கட்டி
சவமாய் சடலமாய
வீசப் போகிறேன்அப்போது
உயிர் இருந்தும் உணர்வுகளற்ற
என் வாழ்க்கைக்கு..
கல்லறையும் கிடையாது
சமாதியும் கிடையாது
கப்றும் கிடையாது....

 எஸ்.ஜனூஸின் வரிகள்..
கறிச் சட்டிக்குள்
சோறு பிசைந்து சாப்பிட்டால்..
மீசை முளைக்காதென்று..
எனது உம்மம்மா சொன்ன..
ஐதீகமொன்றை....இன்றுகளில்
நினைத்துப்பார்க்கின்றேன்....
 பாலை வனம் ஏங்கும்
மழைத் துளியாய்...
மீசைக்காய் ஆசைப்பட்ட..
அந்த இனிய நாட்களை..
அசை போடுகிறது..
எனதான மனசு....

வதுறுதீன் முகம்மத் றியாத்
மனித ஜீவன்களிலிருந்து
வாய் பேசா மிருகங்கள் வரை
ஏன் மரம் செடி கொடி வரை
மரணம் எப்பவும் வரலாம்!
எப்படியும் வரலாம்!!
ஓர் பெண்ணின் கற்பைக் காப்பாற்றுவது
நோயோடு போராடித் துடிக்கும்
உயிரைவிட மேலானது! அவசியமானது!!

கிண்ணியா பாயிஷா அலி
அவளுக்குமென்றான பெருமித முகங்களின்
மறுபுறத்திலே பதிந்து கிடக்கிற ஆழமான கீறல்களோடே
மெல்லமாய் உணர்கிறேன்..................
வீடும் அது சார்ந்ததும் மட்டுமேயான
ஒற்றைச் சிந்தனைக்குள் நிறைவு கண்ட
உமம்மாக்கள்தான் பாக்கியவாதிகள்

வெலிகம  றிம்ஸா முஹம்மட்
புரிதல்களின்மையின் ஏக்கத்தோடு
மருண்டு போகிறது
என் இதயப் பார்வை

கணத்துக்குகணம்
பணம் பார்த்து
குணம் மாறும்
மானிடர் கண்டு சுருக்கிக் கொள்கிறது
அது தன் சிறகை

வேகமாக மிக வேகமாக
கடந்து செல்லும்
மனிதர்களின் முகம் பார்த்து
துயரங்கள்
மீள்சுழற்சியாகின்றன..........

இவ்வாறு பல கவிதைகள் இத் தொகுதியில் பல தலைப்புக்களில்
 இடம்பெற்றுள்ளன.இக் கவிஞர்கள் உடல் அயர்ந்தாலும் மனம்
தளராத கவிப்பூக்களை தொடர்ந்தும் தர வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.
இத் தொகுப்பாசிரியர் அன்ஸாரின் இந்த முயற்சிக்கு என் இத பூர்வமான நல்லாசிகள்