ஞாயிறு, 10 ஜூலை, 2011

பூ முகத்தில் புன்னகை

 நூல்:பூ முகத்தில் புன்னகை
நூலாய்வு
:கலைமகள் ஹிதாயா றிஸ்வி
நூலாசிரியர்:இன்ஷிராஹ் இக்பால்


"கலையுணர்வு என்பது இறைவனின் மாபெரும்
அருட்கொடைகளில் ஓன்று அந்த வகையில்
இயல்பாகவே கலைகளின் மீதான ஆர்வமும்
ஆற்றலும் கைவரப் பெற்றவர் இந்நூலின்
ஆசிரியையான இன்ஷிராஹ் இக்பால்."

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவ  படைப்பாளி இன்ஷிராஹ் இக்பால் அவர்களின் பத்து சிறுகதைகள் தொகுப்பாக" பூ முகத்தில் புன்னகை" எனும் சிறுகதை நூலாக வெளிவந்துள்ளது."சிறுகதைகள் வாசகர் மனதில் இசைவையும் அசைவையும் ஏற்படுத்த வேண்டும்"என்ற ஜெயகாந்தனின் கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் கதைகள் யாவும் மனதுள் ஊடுருவி நிற்கின்றன.தேர்ந்த ஒரு சிறுகதைப் படைப்பாளியின் கதைகளைப் பார்ப்பதைப் போன்ற உணர்வையே ஏற்படுத்துகின்றது.தாயைப் போல் பிள்ளை நூலைப் போல் சேலை என்பதைப் போல் இம் மாணவ படைப்பாளி,தனது ஆசான்களையும் கலையுலகில் மின்னி நிற்கும் தனது தாயாரையும்,இலக்கிய ஆர்வலரும் வெளியீட்டாளருமான அன்புத் தந்தையும் வழிகாட்டலாக ஏற்று பயணித்துள்ளமை மனதுக்கு நிறைவைத் தருகின்றது.அதனால் தான் அவரால் ஒரு காத்திரமான படைப்பைத் தர முடிகின்றது.கதாசிரியை தனது உரையில் கூறியுள்ளது போல தான் கேட்ட,அனுபவித்த,மனதைப் பாதித்த சிறு சிறு சம்பவங்களையே கதைகளாக முன் வைத்துள்ளார்.அனைத்தும் உள்ளத்தை உருக்கும் விதத்தில் தத்ரூபமாகத் தரப்பட்டுள்ளன.தனது கதையோடு வாசகர்களை பதட்டத்துடன்,நெகிழ்வுடன் அழைத்துச் செல்லும் பாங்கில் 'கரு'அமைந்துள்ளமை பாராட்டத்தக்கது."பூ முகத்தில் புன்னகை"என்ற கதையில் பெற்றோரால் புரிந்து கொள்ளப்படாத ஆகாஷின்  மனநிலையைக் காட்ட கதாசிரியை கையாண்டுள்ள உத்தி உன்னதமானது.ஆகாஷின்  கரடி பொம்மையிடம் மனத்தில் உள்ளதைக் கொட்டும் போது,எமது விழிகள் நீரைக் கொட்டுகின்றன.ஒரு கணம் எமது இதயம் குலுங்கி நிற்கின்றது.புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர் செக்கோவின் கதையிலே கதாநாயகன் தன் மனக்குறையை குதிரையிடம் சொல்ல முனைகின்ற காட்சி மனக்கண்களிலே நிழலாடுகின்றது.ஊனமாகிப் போன சிறுவன் ரஸீனை ஒதுக்குகின்ற மனித ஊனங்களின் கோணலை நிமிர்த்த அவனைப் புலமைப் பரிசில் பரீட்சையில் முதற்தர மாணவனாக அரவணைக்கும் கட்டம் சிலிர்க்க வைக்கின்றது.திறமையில் திடமான நம்பிக்கை வைத்து,ஏனையவற்றை மறந்த மபாஸூக்கு மறதியை ஏற்படுத்தி படிப்பினை ஊட்டும் உத்தி அபாரமானது.அதே போல வாசகர்களை ஒரு வகையான மனப்பதட்டத்தோடு,அதீத ஆர்வத்தோடு கடைசிக் கட்டம் வரை நகர்த்திச் செல்கின்ற உத்தி மிக அற்புதம்.'உணர்வுகள் ஊமையாக்கப்பட்ட போது'என்ற கதையில் தான் பாடுகின்ற நிகழ்ச்சியை பார்க்கத் துடிக்கும் பாலாவுடன் சேர்ந்து கதாசிரியை எம்மையும் துடிக்க வைக்கின்றார்.நிகழ்ச்சி ஆரம்பமாகும் நேரத்தில் எசமானி அம்மாள் கடைக்கு அனுப்புகின்றாள்.மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.'அடுத்ததாக ஒரு இனிமையான பாடல் இதோ........'என்ற போது பாலாவின் இதயத்தில் மட்டுமல்ல எம் இதயத்துள்ளும் குதிரை ஓட வைக்கின்றார் கதாசிரியை.'தலைக்கணமா............? தன்னம்பிக்கையா...........?'என் ற கதையில் பரீட்சை நேரத்தைத் தவற விட்ட மபாஸ் பதறி அடித்துக் கொண்டு வீட்டுக்குப் போகிறான்.வீடு பூட்டிக் கிடக்கிறது.அடுத்த வீட்டுப் பெண்மணி ஆறுதலாகத் திறக்கும் வரை அவன் நிலை கொள்ளாமல் தவிக்கின்றான்.பரீட்சை மண்டபம் செல்லும் வரை அவனோடு சேர்ந்து எம்மையும் தவிக்க வைக்கிறார் கதாசிரியை.கற்பனை கலக்காத யதார்த்தமான வசனங்கள்.ஒவ்வொரு வாசகனும் தனக்கு ஏற்பட்டதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் சிறந்த உத்தி கதாசிரியையின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி.உத்திக்குத் தேவையான அளவு,அவசியமான அளவு பாத்திரங்களையே கதையில் புகுத்த வேண்டும்.பாத்திரங்கள் கூடும் போது வாசகர்களுக்கு மயக்க நிலை ஏற்படும்.திரும்பவும் ஆரம்பத்தில் இருந்து பாத்திரங்களை மனத்தில் உறுதிப்படுத்தி நிலைப்படுத்த முயற்சிக்கும் சங்கட நிலைமை உருவாகும்.இவ்வாறான நிலைமையை இச் சிறுகதைத் தொகுப்பில் காண முடியாமை சிறப்பு.இச் சிறுகதைத் தொகுப்பில் நல்ல வசனங்கள் பயன் படுத்தப்பட்டுள்ளமை கதைகளுக்கு மெருகூட்டுகின்றன.திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டுகின்றன.பதச் சோறாக அவற்றுள் சில இதோ...........
                              
                          "அவன் பாடும் போது,தேனில் முக்கிஎடுத்த இனிப்புப் பலகாரத்தை கரும்புடன் சேர்த்துச் சாப்பிடுவது போல இனிக்கும்".
"அவன் பிஞ்சு நெஞ்சம் கற்பனை மஞ்சத்தின் பஞ்சனையில் பென்ச் போட்டு உட்கார்ந்திருந்தது."
"இருதுளிக் கண்ணீர் பீறிட்டுப் பாய்ந்து,கன்னங்களின் கால்வாய் வெட்டி கழுத்து வரை நனைத்து காணாமற் போனது."
"தலைப்பிரசவத்திற்கு காத்திருக்கும் தாயின் தவிப்பு அவனது நடத்தைகளில் இழையோடியது."
"குச்சித் துண்டா இருந்தாலும் குருமனலாய் இருந்தாலும் என்னோட பிள்ளை."
"பை நிறைய நிதியும்,மனம் நிறைய சாதியம் என வதியும் வருமானக்காரர்.:
"விரட்டி ஏசும் வித்தையும்,வாடிக்கையாளரிடம் புரட்டிப்பெசும் தந்திரமும்"
"செருப்பு தற்கொலை மூலம் தனது தவணையை முடித்து விட்டிருந்தது.
இவ்வாறு கதாசிரியையின் கவித்துவமான சொல்லாட்சி முழுத்தொகுப்பிலும் விரவிப்பரவிக் கிடக்கின்றன.பெயர் பெற்ற எழுத்தாளர்களின் எழுத்துக்கு நேருக்கு நேர் நின்று சவால் விடும் வித்தகமான வசனங்கள்.சிறுகதைகள் என்ற போர்வையில் திண்ணைக் கதைகளைத் தரும் இளம் படைப்பாளிகள் ஊன்றி அவதானிக்க வேண்டிய மொழிநடை,இச் சிறுகதைத் தொகுப்பை எழுதத் துடிக்கும் மாநாவப் படைப்பாளிகள் பயிற்சி நூலாக ஏற்றுக் கொள்ளக் கூடியதென்பது என் மேலான சிபாரிசு.தமிழகத்தின் முதுபெரும் எழுத்தாளர் 'மஹதி'பின்வருமாறு கூறுகின்றார்."சிறந்த வசனங்கள் கதை மாளிகைக்குப் பூசப்படும் பெயின்ட்,வர்ணங்களை எங்கெங்கே எப்படிப் பூச வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.அதே போல கதை சுவையாகத் தொடர வேண்டும்.அதிசயிக்கத் தக்க திருப்பத்துடன் முடிவடைய வேண்டும்.கதையைப் படித்து முடிந்த பின்பு நல்ல கதையைப் படித்தோம் என்ற திருப்தி ஏற்பட வேண்டும்"என்கிறார்.இன்ஷிராஹ் இக்பால் தனது கன்னிப் படைப்பின் மூலம் மஹதியின் கருத்தை நிறைவேற்றியுள்ளார். இன்ஷிராஹ் என்ற இலக்கிய இளம் தளிர் விருட்சமாய் வளர்ந்து மிளிர வாழ்த்துக்கள்.

இந்த நூலின் விலை"150 /=
தொடர்புகளுக்கு:எக்மி பதிப்பகம்
                                19 .கமன்தெனிய வீதி,
                                 கிருங்கதெனிய மாவனல்லை.
                                  இலங்கை .
                                  தொலைபேசி:035 - 2246494
                         gmail:acmipublication@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக